JOB TRAINING FOR SCHOOL LEAVERS 2022




கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

2020ம் ஆண்டு நடைபெற்ற கல்லி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி, சித்தி பெறாத சுமார் 98,000 மாணவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு சித்தி பெறாத மாணவர்களின் தகவல்களை, பரீட்சைகள் திணைக்களம், தமக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜங்க அமைச்சு மற்றும் மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான மாணவர்களுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமளவிலான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாட்டிலும் இவ்வாறான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.dome.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்குமாறு மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல கேட்டுக்கொண்டுள்ளார்.